Saturday, August 18, 2012

அன்புடைமை

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.    -   71

தி.பொ.ச.உரை: அன்பை (மனதுக்குள்) அடைத்து வைக்கின்ற தாழ்ப்பாள் இவ் உலகில் இல்லை. ஏனென்றால் அன்புடையோரைக் காணுமிடத்து வெளிப்படும் கண்ணீரே அவரது அன்பை வெளிப்படுத்தி விடும். ( என்பைத் தோலுக்குள் அடைத்து உடலென்று உலகில் உலவ விட்ட இறைவனுக்கு அன்பை அடைத்துவைக்கத் தெரியாதது கண்டு வியக்கிறார் வள்ளுவர்.)
=============================================
  
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.   - 72

தி.பொ.ச. உரை: எல்லாவற்றையும் தமக்கே சொந்தம் என்று கொண்டாடுபவர்கள் அன்பில்லாதவர்கள் ஆவர். கேட்டால் தனது உடல் எலும்பினைக் கூட பிறர்க்கு அளிக்க முன்வருபவர்களே அன்புடையோர் ஆவர்.
===================================================

    அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு.  -  73

தி.பொ.ச. உரை: எப்படி உடலுக்கு எலும்பு ஆதாரமாக இருந்து செயல்படுகிறதோ அதைப்போல அன்பானது உயிருக்கு ஆதாரமாய் இருந்து செயல்படுகிறது.
===================================================

    அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பு என்னும் நாடாச் சிறப்பு.  -  74

தி.பொ.ச. உரை: அன்பானது பிறர் மீது அக்கறையை ஏற்படுத்தும். இந்த அக்கறையானது நாளடைவில் நட்பாக மாறி அளவற்ற இன்பத்தைத் தரும்.
===============================================

    அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு.   - 75

தி.பொ.ச.உரை: உயிர்களிடத்தில் காட்டப்படும் அன்பே உலகில் இன்பமும் புகழும் பெறுவதற்குக் காரணமாய் விளங்குகிறது என்று அறிஞர் கூறுவர்.
================================================

    அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை.   -  76

தி.பொ.ச. உரை: அன்பானது அறச் செயல்களுக்கு மட்டுமே அடிப்படையாகும் என்று அறியாதோர் கூறுவர். (பல நேரங்களில்) வீரச்செயல்களுக்கும் அன்பே அடிப்படையாய் இருக்கிறது. ( அன்பானது கோழையைக் கூட வீரனாக்கும் என்று இதன் மூலம் உறுதிப்படுத்துகிறார் வள்ளுவர்.)
================================================

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.    -  77

தி.பொ.ச. உரை: எலும்பில்லாத புழு வெயிலில் அகப்பட்டுத் துன்புறுவதைப் போல அன்பில்லாத அற்பர்கள் (அரசனுடைய) நீதியின் பிடியில் சிக்கித் துன்புறுவர்.
===================================================

    அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று.    -   78

தி.பொ.ச. உரை:   உள்ளத்தில் அன்பு எனும் ஈரம் இல்லாதவருடைய உயிர் வாழ்க்கையானது பாலை நிலத்தில் நீரின் ஈரம் இல்லாமல் வற்றிப் போன ஒரு மரம் மீண்டும் தளிர்ப்பதைப் போன்றதாகும். (அதாவது பூமிக்குக் கீழே நீரின்றி வற்றிப்போன ஒரு மரம் பெய்த மழையால் சிறிது தளிர்த்தாலும் பாலைநிலத்தின் அகத்தே ஈரமின்மையால் விரைந்து உலர்ந்துவிடும். அதுபோல அகத்தில் சிறிதும் அன்பில்லாமல் புறத்தில் மட்டும் அன்புடையதுபோல நடப்பவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருப்பதுபோலத் தோன்றினாலும் வெகு விரைவில் அது இல்லாது அழியும் என்றார்.) (ஆய்வுக் கட்டுரை)
=================================================

    புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
    அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.    -  79

தி.பொ.ச. உரை: முகத்தின் புற உறுப்புக்களாகிய கண், காது, மூக்கு, வாய் போன்ற எல்லாம் ஒழுங்காய் அமைந்திருப்பினும்  அகத்தில் அன்பு இல்லாவிட்டால் அந்த முகத்தில் அழகு இருக்காது. 
================================================

    அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு.    -  80

தி.பொ.ச.உரை: உடலில் உயிர் நிலைபெற்றிருப்பதற்கு அன்பே காரணமாகும். அந்த அன்பில்லாதவர் எலும்பைத் தோலால் போர்த்திய உயிரற்ற ஒரு நடைபிணமே ஆவர். 
===============================================

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.