Wednesday, August 29, 2012

அடக்கமுடைமை

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.  -  121

தி.பொ.ச. உரை: அடக்கமானது அனைவரும் விரும்பத்தக்க முகப்பொலிவைத் தரும். அடங்காமல் சினம் கொள்வது முகத்திற்கு இருளையே தரும். (இங்கு அமரருள் = அமர்+அருள்= விரும்பத்தக்க முகப்பொலிவு. எதையும் தன்னடக்கத்துடன் கேட்டுக் கொண்டு பொறுமையாக புன்சிரிப்புடன் இருப்போர் முகம் பொலிந்து காணப்படும். எதற்கெடுத்தாலும் அடக்கமின்றி சினம் கொள்வோரின் முகம் இருண்டு கருமையாகக் காணப்படும் என்றார்.)
===============================================

    காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு.   -  122

தி.பொ.ச. உரை: அடக்கத்தை விட ஒருவருக்கு உயர்வினைத் தரக்கூடிய செல்வம் வேறொன்றில்லை என்பதால் அந்த செல்வத்தை ஒருவர் எந்த சூழ்நிலையிலும் (கைவிடாமல்) போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
====================================================

    செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
    ஆற்றின் அடங்கப் பெறின்.    - 123

தி.பொ.ச. உரை: அறச்செயல்கள் இவை என அறிந்து அறநெறிப்படி செய்தாலும் அவற்றையும் தன்னடக்கத்துடன் செய்வதே ஒருவனுக்கு நன்மையைத் தரும். ( காரணம், அடக்கமின்றி செய்யப்படும் அறச்செயல்கள் அகந்தையை உண்டாக்கி துன்பத்தைத் தந்து விடும்.)
===============================================

    நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது.  -   124

தி.பொ.ச. உரை: தன்னுடைய இயல்பான நிலையினின்று மாறாமல் இருந்து மலைக்கு அடங்குவதைப் போல அதன் பின் சென்று மறைந்தாலும் கதிரவன் அந்த மலையைக் காட்டிலும் மிகப் பெரியதே ஆகும். அதைப்போல, தன்னுடைய இயல்பான நிலையினின்று இறுதிவரை வழுவாமல் பொறுமையுடன் அடங்கி இருப்பவன், தன்னை எதிர்த்து வாதிட்டு வருத்துபவனைக் காட்டிலும் உள்ளத்தால் மிக உயர்ந்தவனே ஆவான். ( இங்கு, மலை என்பது இரண்டு பொருட்களைக் குறிக்கும். ஒன்று மண்ணாலும் கல்லாலும் ஆனது. இன்னொன்று மலைதலாகிய வினையைச் செய்பவன். மலைதல் = வாதிட்டு வருத்துதல், எதிர்த்துப் பேசுதல்).
==============================================

    எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.    -   125

தி.பொ.ச. உரை: அடக்கமாகிய பண்பு பொதுவாக யாவருக்கும் நன்மையே செய்தாலும் செல்வந்தர்களுக்குப் பெருமையைத் தேடித் தருகின்ற ஒரே செல்வமாக இதுவே இருக்கிறது.  ( காரணம் சாதாரண மக்களைக் காட்டிலும் செல்வந்தர்கள் தான் தமது பண பலத்தாலும் செல்வாக்காலும் மிக எளிதில் அகந்தை கொண்டு விடுவர். எனவே இவர்களுக்குத் தான் அடக்கமானது மிகவும் பெருமையைத் தருவது என்றார்.)
===============================================

    ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து.   -  126

தி.பொ.ச. உரை: (துன்பம் வரும்போது) ஒரு ஓட்டுக்குள் தனது ஐந்து உறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல (துன்பம் நேரும்பொழுது) தனது ஐம்புலன்களை அடக்கியாளத் தெரிந்தவனுக்கு ஒவ்வொரு நாளும் பாதுகாப்பானதே. ( இங்கு 'ஒருமை' என்று ஆமையின் ஓட்டினையும் 'எழுமை' என்று ஒவ்வொரு நாளையும் குறிப்பிடுகிறார். இதே போல 'எழுபிறப்பு' என்ற சொல்லின் மூலம் குறள் 62 லும் ஒவ்வொரு நாளையே குறித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. )
================================================

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.   -   127

தி.பொ.ச.உரை: (துன்பம் நேரும் போது) ஐம்புலன்களையும் அடக்க முடிகிறதோ இல்லையோ நாவினைக் கட்டாயம் அடக்கியாள வேண்டும். இல்லையேல் தவறாகப் பேசியமைக்காகப் பின்னர் வருந்த நேரிடும். ( ஒருவர் தவறாக நம்மிடத்தில் பேசும்போது அல்லது நடந்து கொள்ளும் போது அதன் எதிர்வினையாக முதலில் நாம் கையை ஓங்குவதில்லை. நமது வாய் தான் முந்துகிறது. எனவே தான் நாவை முதலில் அடக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.)
=================================================

    ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றாகா தாகி விடும்.      -   128

தி.பொ.ச. உரை: (துன்பம் நேரும் போது தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நாவை அடக்காமல்) ஒரே ஒரு பொய் / குறளை / கடுஞ்சொல்லைக் கூறிவிட்டாலும் அதன் விளைவு நன்மையைத் தராது.
=================================================

    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு.    -   129

தி.பொ.ச. உரை: தீயினால் சுடப்பட்டது ஒருமுறை தான் என்பதால் அந்த புண் முழுதும் ஆறிவிடும். ஆனால் நாவினின்று வெளிப்பட்ட கடுஞ்சொற்கள் (கேட்டோரின் மனதுக்குள் இருந்துகொண்டு பலமுறையும்) சுட்டுக் கொண்டே இருப்பதால் அது ஆறாமல் வடுவாகி விடும்.
===================================================

    கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.   -  130

தி.பொ.ச. உரை: (எந்தச் சூழ்நிலையிலும்) சினம் எழாமல் தன்னைக் காத்துக் கொள்பவனும் கற்ற அறிவினால் அகந்தை கொள்ளாமல் அடங்கி இருப்பவனும் ஆகிய  ஒருவனைக் காண்பதற்காக அரசனே அவன் வரும் வழியில் விழிவைத்துக் காத்துக் கொண்டிருப்பான்.
==================================================

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.